Thursday, September 18, 2008

தவிக்கும் தேசம்-2



எழுதியவர்-------

------செம்மதி

குருவிகள் எல்லாம்
கூடு கட்டி
நிம்மதியாய் வாழுது
நாங்கள் இங்கே
வீடு விட்டு
ஊரிளந்து
ஏதிலியாய்
தெருத் தெருவாய்
அலைந்து வாழ்கிறோம்
ஓடி ஒடி
களைத்துவிட்டோம்
நாம்
கடலில் விழுந்து சாவதா?

பகல் இரவாய்
பதுங்கு குழியில்
உறைந்தும் வாழ்கிறோம்
உலோகப் பறவை
கண்டு குண்டு போட்டால்
மண்ணோடு மண்ணாய்
மறைந்தே போகிறோம்

பள்ளி கோயில்
எல்லாம் இங்கே
பாசறையாய்த் தெரியுதாம்
தமிழ்ப் பெண் வைத்திருக்கும்
கைக்குழந்தை
ஏ.கே 47 ஆகப் படுகுதாம்
சிறு குழந்தை
கிழவன் கிழவி எல்லாம்
பயங்கர வாதி என்றே கணக்கு

பச்சை அரிசிச் சோறும்
பாலும் தேனும்
புசித்து வாழ்ந்தவர்
இப்போ
விளைந்தது எல்லாம்
அழிந்ததனல்
பட்டினியாய்
பசிக்க வாழுறோம்

உதவி செய்ய வந்தவரையும்
தடுத்து துரத்திவிட்டு
எம்மை கூட்டோடு
அழிக்கவா போகிறார்?
இங்கே வாரும்
இங்கே வாரும்
என்றோ எம்மை
வீம்பாய் கூப்பிடுகிறார்
அங்கேபோனால்
சும்மாய் எம்மை விடுவாரா?
மனச்சாட்சியை
சிறைப்பிடித்து
மனித உரிமைபற்றி பேசுகிறார்

ஈழ மக்கள் நாம்படும்பாடு
யாருக்கிங்கே தெரியுது
துணிவிருந்தால்
வந்து பாரும்
உணர்ந்தால்தான்
அது உமக்குப் புரியும்

உலகத் தமிழினமே!
உங்கள் இரத்த உறவுகள் நாம்
தினம் செத்து மடிகின்றோம்
நீங்களும்
எங்களுக்காக
குரல் கொடுக்க மாட்டீரோ ??

No comments: