Friday, March 28, 2008

தவிக்கும்தேசம்


எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------



தாய்மார்பு
சுரக்கமறுத்ததனால்
அழும் குழநதையின்
அழுகுரல்
முகாரியாய் ஒலித்தது
அடங்கிப்போகிறது
பட்டினியாய் இருக்கும்
பெற்றதாய் வயிறு
பற்றி எரிகின்றது
பால்மாப் பைகள்
கால்முளைத்துவிலகி ஒடுகின்றது
ஐந்து ருபாவிற்கு வாங்கிய
ஒருகிலோ வாழைப்பழத்தின் தோல்
எம் பசி போக்காது
திண்ணையில் சிதறிக்கிடக்கிறது
எம்மைப்போல
மழை ஒழுக்கில்
நனையாமல்
தாய்மடியில் தஞ்சமடையும்
தங்கையை
தாயின்கண்ணீரே
நனைக்கின்றது
எனக்கு மீசை அரும்புகிறது
வெளியெ போகவிடுகிறாள்ளில்லை
அம்மா
காதல்வந்தவிடும் என்பதற்காகஇல்லை
மரணம் வந்துவிடக்கூடாது என்பதற்காக
பள்ளிசெல்லும்
என் தங்கையை
தீண்டப்பார்க்கிறார்கள்
கைதிகளுடன்
சிறையிருக்கும்
பெண்சுகம் இன்றித்தவிக்கும்
சிறைக்காவலர்கள்
விறைத்த அங்கத்துடன்
எரிகின்ற குப்பிவிளக்கின்
மங்கிய ஒளியில்
காணாமல்ப் போன
அண்ணனின் புகைப்படம் தெரிகிறது
கூடவே அப்பாவும்
விடைகாணாப்புதிர்களாக
காணாமல் போனவர்கள்
கண்டுபிடிக்கப்படுகிறார்கள்
பிணங்களாக
எம் வீட்டுப் பூசையறையில்
ஒரு குங்குமச்சிமிழ்
கேள்விக்குறியாய்
தவம் இருக்கிறது
தொடரணிக்காக
மக்கள் தொடரணியாய்
சிறு வீதிகளில்
கனத்த மனதுடன்
காத்திருந்தார்கள்
குண்டுச்சத்தங்கள் தினமும்
தாலாட்டாய்
காதில் ஒலிக்கிறது
ஊர் அடங்கு முன்பே
ஊர் ஒடுங்கிப்போகிறது
விலங்குகளாய் பிறந்திருந்தால்
வயிறாற உண்டிருருப்போம்
வீடு வாசல் தேவையில்லை
நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்
இங்கு பலர் செய்த சதியாலே
தினமும் செத்து மடிகிறோம்
சதியை மதியாலே வென்று
உயர்ந்திடுவோம்..
--------------------------------

Wednesday, March 26, 2008

உறக்கமில்லா இரவுகளில்

எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------


நாங்கள் உறக்கத்தில்
விடியும் பொழுது
எங்கள் உள்ளாடைகளும் அல்லது
உயிர்களும்
சிலவேளை இரண்டுமே
பிரிந்திருக்கலாம்
எப்போதும்
எங்கள் உடம்பில்
ஊலோகத்துண்டின்
ஊடுருவல் நிகழாலாம்
அது எதற்கு நடந்தது என்று
எனக்கே தெரியாது போகும்
நாளை என்பதை
நினைத்துப் பார்ப்பதே
வேண்டாத வேலையாக உள்ளது
எதுவுமே நிச்சயமில்லை
நாளைய விடிவு ஒரு
சுடுகாட்டிலும் இருக்கலாம்
தெருக்களில் நாய்கள் குலைக்கின்றன
நாளை காலை
அவை குலைத்தமைக்கான காரணம்
தெரியவரும்
கொஞ்சம் நில்லுங்கள்
என் வீட்டு வாசலில்
யாரோ நிற்பது போல் உள்ளது
பார்த்துவிட்டு வருகிறேன்...
அது ஒன்றுமில்லை
எங்கள் வீட்டு நாய்தான்
குலைத்துக் களைத்து
வந்து படுமுத்திருக்கிறது
இப்போதெல்லாம்
எங்கள் நிழலையே
சந்தேகப்படவேண்டியிதாகவே உள்ளது
நாய்கள் சுகந்திரமாகவே
வீதியில் நடமாடுகின்றன
ஆனால் அவற்றுக்குள்ள
சுகந்திரம் எமக்கு இல்லை
இரண்டாம் சாமக் கோழியும்
கூவுகிறது
என் குழந்தைகள்
அரைவயிறு உண்டுவிட்டு
ஆழ்ந்த நித்திரையில்
என் மனைவி
இப்போதுதான்
அயர்ந்து தூங்குகிறாள்
அவளுக்கு இங்கு
வாழப்பிடிக்கவில்லை
எங்காவது போவோம் என்கிறாள்
எங்குதான் இப்போது
வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு
பக்கத்து அறையில்தான்
என் தங்கை உறங்குகிறாள்
அவளின் கணவரை காணவில்லை
எனது வயல் நிலங்கள் மட்டுமா
எம் தங்கைகளின் வாழ்வும்தான்
தரிசாகிப்போகிறது
இதோ விடிந்து விட்டது
இன்று விடிந்து விட்டது
நாளை???
-----------------------------------------