Thursday, June 4, 2009

யார் வருவார் மீட்பராய்


__

யாரிடம் போய்ச் சொல்வது
சிதைந்துபோன எனது வாழ்வு பற்றி?
காரணம் என்ன என்று தெரியாதே
கம்பிக் கூட்டுக்குள்
கரைந்து போகும்
எனது இளமை பற்றியும்
காலைக் கடன்கூடக் கழிக்கமுடியாது
விலங்கிடப்பட்ட
எனது கைகள் பற்றியும்
மனிதனாய் இருக்கும்போதே
நரகத்தின் வேதனை காண்பது பற்றியும்
ஒரு நாளும் பசியடங்கா வயிற்றுடன்
மனித மிருகங்களின் வக்கிரகங்களால்
வதைக்கப்படுவது பற்றியும்
குற்றங்கள் சுமத்தப்படாதே நான்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
விசித்திரத்தைபற்றியும்
யார்தான் தட்டிக்கேட்பார்கள்.

திருமணமாகியும் வெகுமதிகள் எதுவுமின்றி
என் வரவிற்காய் இன்னும் காத்திருக்கும்
அன்பான மனைவிபற்றியும்
என்னுடன் அடைக்கப்பட்ட அண்ணன்
காணாமல் போனவுடன்
எம் நிலை கண்டு அம்மா
பைத்தியமாய் அலைவது பற்றியும்
யார்தான் அக்கறை கொள்வார்?
ஆட்சி மாறும்போது
நாம் வீடு மாறுவது போல்
சிறைக்கூடங்கள் மாற்றப்படுவது பற்றியும்
பெரும் பிரச்சினைகள் மத்தியில்
எம் பிரச்சினை
சிறு பிரச்சினையாக்கப்பட்டதையும்
யார் தான் சிந்தித்துப்பார்ப்பார்?
எவர் வருவார் மீட்பராய்... ????


-----------------------------------------------

செம்மதி..................

No comments: